25 கி.மீக்கு ரோடு ஷோ! மதுரையில் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்தார் ஸ்டாலின்!
மதுரை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் 25 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தி வருகிறார். வழி நெடுக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். இதையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரம் ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மதுரை முதல் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கும் பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். சிலை திறப்பிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டியிருந்தார்.
திமுக மாநில பொதுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மதுரை புறப்பட்டு வந்தார்.

அவரை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனியார் ஹோட்டலில் சிறிது தூரம் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், மாலை 6 மணியளவில் ரோடு ஷோ நடத்தினார்.
மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 25 கி.மீ. தூரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் கலந்து கொண்டார். பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை சாலையோரம் திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சியினரை திறந்த வேனில் நின்றபடி முதல்வர் சந்தித்து வருகிறார்.
இந்த ரோடு ஷோவையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் ஸ்டாலின் வாங்கினார். இந்த ரோடு சுமார் 3 மணி நேரம் நடந்தது. இதையடுத்து மதுரை மெஜிரா கோட்ஸ் ஆலை முன் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இரவு அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை 9 மணிக்கு உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். முதல்வரின் மதுரை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அது போல் ரோடு ஷோ நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழியெங்கும் திமுக கொடி, தோரணங்கள், போஸ்டர்கள் என மதுரையே ஸ்தம்பிக்கிறது.












Click it and Unblock the Notifications