பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
Recommended Video
முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க ஆலயத்தில் நேற்றைய தினம் காலை பிள்ளையார்பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.

இன்று நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குரு பூஜை விழாவும் தொடங்கியது. அப்போது தேவர் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் ஸ்டாலின் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக பங்கேற்றார். ஆனால் இந்த முறை முதல் முறையாக முதல்வராக ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள நேற்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார். இன்று அவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்த மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உக்கிரபாண்டியத் தேவர்- இந்துராணி அம்மாளுக்கு 30.10.1908 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் மகனாக பிறந்தார். பின்னர் 30.10.1963 ஆம் ஆண்டு அவரது பிறந்த தினத்தில் அவர் மறைந்தார். இந்த ஜெயந்தி விழாவாகவும் குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி வாகன சீட்டு பெற வேண்டும் என்றும் அதை வாகனத்தின் கண்ணாடியின் முன்பு நன்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் விழா இது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன் செல்ல போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மதுரை கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பர். நேற்றைய தினமே வந்த சசிகலா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications