"தெற்கே" டார்கெட்.. பழைய கேஸ்களை கையில் எடுங்க.. ரவுடிகளை விடாதீங்க.. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
மதுரை: கட்டப்பஞ்சாயத்து கந்துவட்டி கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷ்னர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு காவல் துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.
அதன் ஒரு பகுதியாக மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார்.

தென் மண்டலம்
இவர் குற்றச் செயல்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்க கூடியவர் என்று பெயர் பெற்ற அதிகாரி ஆகும். எனவே டிஜிபியாக பதவி ஏற்றது முதல் அதிரடிகளை தொடங்குவார் எதிர்பார்ப்பு இருந்தது. இதன் ஒரு பகுதியாக தென் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு மதுரையில் வைத்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சிறப்பு கவனம்
மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மண்டல மாவட்டங்களில், ரவுடியிசம் அதிகம் என்பது கடந்த கால புள்ளிவிபரங்கள் சொல்லக்கூடிய பாடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் தென் மண்டலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

மதுரையில் வைத்து ஆய்வு
மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தென் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், எஸ்பிக்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பழைய வழக்குகளை கையில் எடுங்க
தென் மண்டலத்தில் உள்ள ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க அப்போது சைலேந்திர பாபு ஆலோசனை வழங்கினார். ரவுடிகள் மீதான பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அதிகபட்ச தண்டனை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தரம்பிரித்து நடவடிக்கை
கட்டப் பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தரம்பிரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும், மதுரையை பரபரப்பாக்கிய குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாகவும் சைலேந்திர பாபு கேட்டறிந்தார்.

காவல்துறைக்கு உதவிகள்
சிறப்பாக செயல்பட்ட 18 காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்களை கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தார் அவர். கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேனி காவலர், பிருத்விராஜ் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையையும் சைலேந்திர பாபு வழங்கினார்.












Click it and Unblock the Notifications