ஓசி பயணம்னு எப்படி சொல்லாம்! பெண்களே அவங்களுக்கு பயத்தை காட்டணும்.. டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்
மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தான் கட்சி ரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் மதுரை சென்று இருந்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பண்டிகை காலத்தில் தான் ஆம்னி பேருந்து முதலாளிகளுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் வசதியானவர்கள் ஆம்னி பேருந்திலும் ஏழை மக்கள் அரசு பேருந்திலும் போகலாம் என்கிறார் அமைச்சர். இப்படிச் சொல்ல எதற்கு அமைச்சர் என்று ஒருவர் இருக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

அமைச்சர் எதற்கு
சொந்த ஊருக்குச் செல்லவே 4000 ரூபாய் என்றால், அதன் பின் ஊருக்குச் செல்வதில் அர்த்தமே இல்லையே.. வழக்கமான கட்டணத்தை விடப் பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி உள்ளனர். எல்லாமே வியாபாரம் என்றால் அரசும் வியாபார அரசா? இது மக்களுக்கான அரசாக இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அரசு பேருந்து தரமாக இருந்தால் மக்கள் ஏன் ஆம்னி பேருந்துகள் பக்கம் செல்கிறார்கள். இதன் காரணமாகவே ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

சட்ட ஒழுங்கு
தமிழகத்தில் சில காலமாகக் கவலை அளிக்கும் வகையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் அதிகரித்து இருக்கிறது.. சட்ட ஒழுங்கை முதல்வர் தான் கையில் வைத்து உள்ளார். ஆனால், சட்ட ஒழுங்கு நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆனால் முதல்வரே இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது சரி இல்லை.

பேருந்து பயணம்
தான் இலவசமாகப் பயணிக்க மாட்டேன் என்று மூதாட்டி ஒருவர் சண்டை போட்டுள்ளார். இதை அதிமுகவினர் வேண்டுமென்றே செய்ததாகச் சிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை எனத் தெரியவில்லை. திமுக அமைச்சர் ஒருவர், பெண்கள் ஓசியில் பயணிக்கிறார்கள் என்கிறார். அதேபோல மற்றொருவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் தரச் சில்லறை மாற்றுகிறோம் என்கிறார். எதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு எனத் தெரியவில்லை.

புறக்கணிக்க வேண்டும்
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, பின்பு ஒரு நிலைப்பாடு ஏன் எனப் புரியவில்லை. அந்த மூதாட்டி எப்படி ஓசியில் பயணம் வேண்டாம் என்று சொன்னாரோ அதேபோல ஒட்டுமொத்த தமிழக மக்களும் இலவச பயணம் வேண்டாம் என்று புறக்கணிக்க வேண்டும். அது தான் ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். இந்த ஆட்சியாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதுபோன்ற கருத்துகளை அமைச்சர்கள் தவிர்க்கக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications