பெரிய கட்சியா? திமுகவால் கூட்டணியின்றி வெல்ல முடியாது.. மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் சொன்ன தகவல்
மதுரை: திமுக, அதிமுக உள்ளிட்டவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தில் கூட்டணியின்றி வெற்றி பெற இயலாது என்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுக, திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் கூட ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது இல்லை. திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.

தற்போது அதுதொடர்பான விவாதம் கிளம்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வருவோருக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்று கூறியது தான்.
இதனால் வரும் சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவும் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழ தொடங்கி உள்ளது. ஆனால் அதுபற்றி இன்னும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.
இதற்கிடையே தான் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட கூட்டணி இன்றி அந்த கட்சிகளால் வெல்ல முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அதாவது மதுரை மாநகர் மாவட்ட மாநாடு இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க சென்ற பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. பாஜக மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போன்று இலவசங்களை அறிவித்துள்ளது. பாஜக தேர்தல் வெற்றிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யும். மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிருக்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என தெரிவிக்கின்றனர்.
"அதிமுகவின் 5 அதிசயத்திலும் இருப்பவர்".. எடப்பாடிக்கு நடிகர் தம்பி ராமையா ஆதரவு.. ஈபிஎஸ் ரியாக்ஷன்
எங்களை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி கூட்டணியில் வெற்றி பெற்று அதனை செயல்படுத்தும் கூட்டணியை தான் எதிர்பார்க்கிறாம்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம். புதிதாக வந்துள்ள சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கின்றனர். அவர்களுடன் யார் கூட்டணி சேர போகிறார்கள். அப்படி சேர்ந்தாலும் அவர்கள் என்ன வெற்றி பெற போகிறார்களா? வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு வழங்க போகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications