மொபைல் ஸ்டிக்கர்.. எல்லோருக்கும் தொப்பி.. குற்றப்பத்திரிகையில் கையெழுத்து.. கிராம சபையில் Dr.சரவணன்
மதுரை: மதுரை மாவட்டம் பனையூரில் நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் மக்கள் கையெழுத்தை பெற்றார் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு 16,500 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் முதல் நாளான இன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் உறுப்பினர்கள் என அனைவரும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினர். மதுரை மாவட்டம் பனையூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்களை பொதுமக்கள் ஆதரவுடன் நிறைவேற்றினார்.
மேலும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் மொபைல்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்களை விநியோகித்தார். இதுமட்டுமல்லாமல் கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்பலகையில் மக்களின் கையெழுத்தையும் பெற்றார்.
இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை மனம் விட்டு குமுறினர். அதனை பொறுமையுடன் செவிமடுத்த சரவணன், கடந்த 10 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் இல்லை என்பதையும் வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தாமே முன்னின்று குறைகளை தீர்த்து வைப்பேன் எனவும் உறுதியளித்தார்.