கீழடி விவகாரம்.. அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம்.. சரியான நேரத்தில் மதுரையில் திமுக செய்யும் சம்பவம்
மதுரை: கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை வெளியிடாமல் திருப்பி அனுப்பிய மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக சார்பாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை கீழடி அருங்காட்சியம் அருகே நடக்க உள்ள ஆர்ப்பாட்டம் என்பதால், ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மத்திய அரசு, திடீரென திருப்பி அனுப்பிவிட்டு அறிவியல் ஆதாரங்கள் கேட்டது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மதுரையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! என்று பதிவிட்டிருந்தார். இந்த ஆர்ப்பாட்டம் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடந்து வருகிறது உள்ளது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது கடுமையான எதிர்ப்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏராளமான முறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications