சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆள்வார்கள் என நினைக்க வேண்டாம்.. விஜயை ‛அட்டாக்' செய்த அண்ணாமலை
மதுரை: ‛‛உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ.. சினிமா தியேட்டருக்கு போங்க.. விசிலடிங்க.. படம் பாருங்க.. வெளியே வாங்க.. அதோடு முடிந்துபோய்விட்டது. சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆள்வார்கள் என்று நினைத்தால்.. அது வேண்டாம். இங்கே குழந்தைகள், பெண்கள் வந்தால் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வார்கள் என்ற உறுதியை பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கொடுக்கும்'' என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

இதன் அடுத்தக்கட்டமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். ‛தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார்.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆள்வார்கள் என்று நினைக்க வேண்டாம் என மறைமுகமாக விஜய்யை சாடினார்.
இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாவது: உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ.. சினிமா தியேட்டருக்கு போங்க.. விசிலடிங்க.. படம் பாருங்க.. வெளியே வாங்க.. அதோடு முடிந்துபோய்விட்டது. சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆள்வார்கள் என்று நினைத்தால்.. அது வேண்டாம்.
இதனால் இந்த 2026 சட்டசபை தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டிய நமக்கு இருக்கிறது. யாராவது மாற்றி ஓட்டு போடுவதாக கூறினால் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். 10 ஆண்டு ஆட்சி (மத்திய அரசு), 5 ஆண்டு ஆட்சி (மாநில அரசு) என இருஆட்சியையும் பாருங்கள் என்று சொல்ல வேண்டும்.
இதை எதற்கு மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன் என்றால்.. திமுகவின் மனதில் இருக்கும் அஸ்திரம் வாக்கு பிளவு ஏற்பட்டால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற மததை, அகங்காரம் உள்ளது. முழுமையாக நமது வாக்குகள் நமக்கு வர வேண்டும்.
கட்சியின் வாக்குகள் வர வேண்டும். பொதுமக்களின் வாக்குகள் நமக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகள் நமக்கு வர வேண்டும். அதற்காக தான் இந்த யாத்திரை. நம்முடைய கட்சி நண்பர்கள் மட்டும் கூட்டத்துக்கு வந்து மாநில தலைவரை பார்த்து விட்டு செல்வதற்காக அல்ல இந்த யாத்திரை.
இன்னும் முடிவு செய்யாத ஒருவரை யாத்திரைக்கு அழைத்து வாருங்க. நயினார் அண்ணன் ஊருக்கு வரும்போது நம்முடைய கட்சி சொந்தங்கள் கட்சியில் இல்லாத ஒருவரை கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். அதுதான் இந்த யாத்திரையின் சாதனையாக இருக்க வேண்டும். கட்சியில் இல்லாத ஒருவர் வந்து நயினார் நாகேந்திரன் பேசுவதை கேட்க வேண்டும். அதேபோல் இன்னும் 67 தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை கேட்க வேண்டும். அதை கேட்டுவிட்டு அவர்களின் மனதை மாற்ற வைக்க வேண்டியது தொண்டரின் கடமை.
ஆயிரம் பேர், 10ம் பேர், ஒரு லட்சம் பேர் என்று எத்தனை பேர் வந்தாலும் பாதிக்கு பாதி பேர் அரசியல் கட்சியில் இல்லாதவராக இருக்க வேண்டும். இங்கே குழந்தைகள் வந்தால் பாதுகாப்பாக செல்வார்கள் என்ற உறுதி தேசிய ஜனநாயக கூட்டணி கொடுக்கும். பெண்கள் வந்தால் அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வார்கள் என்ற உறுதியை பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கொடுக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications