''தலைவர் வைகோ இன்றிரவு நிம்மதியாக உறங்கச் செல்வார்''! மதிமுக மாநாட்டில் கண்கலங்கிய துரை வைகோ!
மதுரை: மதிமுக மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளதால், வைகோ இன்றிரவு தான் நிம்மதியாக மன நிறைவோடு உறங்கச் செல்வார் என துரை வைகோ பேசியிருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் பேசிய அவர் இதனைக் கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்பதையும் துரை வைகோ மதுரை மாநாட்டில் அறிவித்துவிட்டார். அரசியலில் தனது தந்தை பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் நினைவுகூர்ந்து பேசிய துரை வைகோ, பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கிவிட்டார்.

மதிமுக எங்கே இருக்கிறது என்று ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் ஃபீனிக்ஸ் பறவையை போல் மதிமுகவை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ வைப்போம் என்ற சபதத்தை ஏற்போம் என துரை வைகோ பேசினார். தனக்கு பதில் கட்சியிலிருந்து ஒருவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை கட்சித் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் கோரிக்கையாகவே இந்த மேடையில் வைக்கிறேன் என அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தார். இதன் மூலம் தனது தந்தையை போலவே தனக்கு பதவி ஆசை கிடையாது என்பதை துரை வைகோ உணர்த்திவிட்டார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் வைகோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அரசியலுக்கு வர வேண்டிய சூழல் வந்ததாக கூறிய துரை வைகோ, கட்சியிலிருந்து கொண்டே வைகோவையும், கட்சியையும் சிறுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications