மதச்சார்பற்ற கூட்டணியில் பாமக இணைய வேண்டும்! அழைப்பு விடுக்கும் துரை வைகோ! பரபரக்கும் அரசியல்!
மதுரை: மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியில் பாமக இணைந்தால் தனக்கு மகிழ்ச்சி என மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், பாமக மட்டுமல்ல மதச்சார்பற்ற கூட்டணியில் வேறு எந்த இயக்கம் இணைந்தாலும் தாம் வரவேற்பதாக அவர் கூறியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
துரை வைகோ
மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மாதத்தின் பாதி நாட்களில் சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார் துரை வைகோ. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்சிக்காரர் இல்ல விழாவில் கலந்துகொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத உணர்வுகளை யாராக இருந்தாலும் புண்படுத்தக் கூடாது என்பது வைகோவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
தேர்தலில் போட்டி
வைகோவை பொறுத்தவரை அவர் ஒரு பகுத்தறிவாளர் என்றும் மதவாத சக்திகள் சிலர் அவர் கோயிலுக்கு சென்றதை தவறாக சித்தரிப்பதாகவும் இது அநாகரீக செயல் எனவும் துரை வைகோ தெரிவித்தார். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிடும் எண்ணமோ திட்டமோ கிடையாது என்றும் இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் நிர்பந்தித்தால் அதை ஏற்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாமகவுக்கு அழைப்பு
மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியில் பாமக இணைந்தால் தனக்கு மகிழ்ச்சி எனவும் பாமக மட்டுமல்ல மதச்சார்பற்ற கூட்டணியில் வேறு எந்த இயக்கம் இணைந்தாலும் தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். துரை வைகோவின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்தாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியை நோக்கி பாமக நகர்வதாக ஒரு பேச்சு எழுந்துள்ள நிலையில் துரை வைகோவின் இந்தக் கருத்து பல்வேறு அர்த்தங்கள் பொதிந்ததாக இருக்கிறது.
கருத்து ஆழமிக்க
முன்பைக் காட்டிலும் இப்போது அரசியலில் தீவிரமாக களமாடி வரும் துரை வைகோ கருத்தாழமிக்க வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர் களமிறங்குவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.