துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார்... ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்
திருமங்கலம்: ராஜதந்திரமாக ஒரு மாதத்திற்குள் அதிமுக ஆட்சியை கலைப்பதாக கூறிய துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து என்றார். தர்மயுத்தம் நடத்திய காலத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் பேசிய கருத்துக்கு நான் எவ்வித பதிலும் கூறியதே இல்லை என்றும் பதிலளித்தார்.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் தைரியம் இருந்தால் நாங்கள் தினகரன் கட்சியில்தான் இருக்கிறோம் என்று கூற தயாரா? என்று கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், அப்படி கூறினால், அது அவர்களின் வீரத்துக்கு அழகு. இல்லையென்றால் அது கோழைத்தனம் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் கூறினார். இதனிடையே, பாஜகவுக்கு நீங்கள் போக போவதாக தகவல் வெளியாகி உள்ளதாக நிருபர் எழுப்பிய கேள்வியால், டென்சனான ஓ.பன்னீர்செல்வம், அது முட்டாள்தனமான கேள்வி என்று கோபத்துடன் பதிலளித்தார்.
யார் தூண்டி விட்டு கேட்கிறீர்கள்? என்று ஓபிஎஸ் மீண்டும் டென்சனுடன் கேட்டார். பணப்பட்டுவாடா குறித்து யூகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாது என்றும் கூறினார்.