ஓபிஎஸுக்கு கேட்.. “பவர்” காட்டிய பழனி! திரண்ட தெற்கு தலைகள்.. மூக்கையா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி
மதுரை: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு தெற்கு மாவட்டங்களை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையா தேவர் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர்.
இந்த நிலையில், மூக்கையா தேவரின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

ஓ.பி.எஸ் அமைத்த குழு
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை கொண்டு 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துமாறு அறிவித்தார். தென் மாவட்டங்களில் உள்ள தனது பலத்தை காட்ட ஓ.பன்னீர்செல்வம் இதனை பயன்படுத்துவதாக கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் இன்று மூக்கையா தேவர் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டார். அதில், "பொதுவாழ்வில் நேர்மையை கடைபிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மாசற்ற தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியும், கல்விச்சேவையும் ஆற்றிய உறங்காப்புலி
திரு.பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு நாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.

முன்னாள் அமைச்சர்கள்
அவரை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களும் மூக்கையா தேவர் நினைவுநாளை முன்னிட்டு ட்விட்டரில் அவரை போற்றி கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் காலை 11 மணிக்கு மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கு சென்றனர்.

தென்மாவட்ட தலைவர்கள்
தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மூக்கையா தேவர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான தெற்கு மாவட்ட அதிமுகவினர் திரளாக பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications