அதிமுகவை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.. உற்சாகம் பீறிட.. உரத்து சொன்ன எடப்பாடி
அதிமுக பொதுக் குழு செல்லும் என அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்- எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி
மதுரை: அதிமுக வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என நினைத்த நிலையில் தற்போது நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதால் இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு வழக்கு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது. இதனிடையே மதுரை திருமங்கலமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அதிமுக பொதுக் குழு
இந்த விழாவில் அதிமுக பொதுக் குழு குறித்த தீர்ப்பு எடப்பாடிக்கு சொல்லப்பட்டது. அப்போது அவர் முகமெல்லாம் சிரிப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அவர் விழா மேடையில் பேசுகையில் அதிமுக பொதுக் குழு தீர்ப்பு எப்படியிருக்குமோ என இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கலங்கினேன்.

திருமங்கலத்தில்
இன்று காலையில் திருமங்கலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோயிலில் அதிமுக பொதுக் குழு தொடர்பான தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அம்மாவிடம் வேண்டியதில் தீர்ப்பும் நமக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

திமுகவின் பீ டீம்
திமுகவின் பி டீமாக செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது. இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இந்த 51 ஜோடிகளும் மிகவும் ராசியானவர்கள், இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்துக் கொண்டிருந்த நிலையில் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது நடக்கும். வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது என திருமண விழாவில் எடப்பாடி பேசினார்.

திருமங்கலம் பார்முலா
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தோம். ஆனால் நாங்கள் கொடுத்த ஒரு புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமங்கலம் பார்முலாவை போல் ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே எங்கும் வாக்காளர்களை அடைத்து வைத்ததில்லை என எடப்பாடி பழனிச்சாமி அந்த திருமண விழாவில் பேசியிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்தும் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே கூறிவிட்டதால் இனி அதிமுக தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஒரு சிலரை தவிர அதிமுகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உதவும். அதிமுக மூன்றாக பிரிந்துவிட்டது, நான்காக பிரிந்துவிட்டது என்றார். ஆனால் இனி ஒரே அதிமுகதான். ஒன்றரை கோடி தொண்டர்களின் பொதுச் செயலாளராக இருப்பேன். ஓபிஎஸ், தினகரனிடம் இருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கிவிட்டார்கள். இனி அதிமுக எழுச்சியுடன் செயல்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications