பசுந்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை.. இளைஞர்களை பாதுகாத்த இபிஎஸ் குரல்..சொல்கிறார் ஆர்பி உதயகுமார்
மதுரை: தமிழக அரசின் அரசாணை 115 திரும்பப் பெறப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து அரசின் குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
உங்க பஞ்சாயத்து தீராதா? டென்ஷனான எடப்பாடி! எம்.பி மீது கேபிஎம் புகார்.. வடக்கில் ஈகோ யுத்தம்! ஆஹா!
ஆர்பி உதயகுமார் அறிக்கை
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினந்தோறும் ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நினைவுபடுத்தி வலியுறுத்தி வந்தாலும் கூட, தேர்தல் வாக்குறுதிகள் இன்றைக்கு கிணத்திலே போட்ட கல்லாக காட்சி அளிக்கிறது.
கிணற்றிலே போட்ட கல்
குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்கள். தமிழகம் முழுவதும் உள்ள மூன்றரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 187ல் கூறப்பட்டன.
புதிதாக ஏறத்தாழ 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மொத்தம் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். இன்னைக்கு வாக்குறுதிகள் கிணற்றிலே போட்ட கல்லாக உள்ளது.
இபிஎஸ் விழிப்புணர்வு
இன்றைக்கு சமூக நீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய ஒரு நிலையில் தமிழகத்திலே இன்றைக்கு 69% இட ஒதுக்கீடுக்கு பேராபத்து வரக்கூடிய அரசாணை எண் 115 யை முதல் முதலாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிலே முதல் உரிமைக் குரல் எழுப்பினார். அரசாங்க எண் 115 ரத்து செய்ய வேண்டும் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனுடைய பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு இந்த அரசினுடைய நடவடிக்கைக்கு சுட்டிக்காட்டினார்.
அரசாணை 115 சொல்வது என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையும், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு இந்த தேர்வாணையங்கள் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்து நாம் அரசு பணியிலே நியமிக்கின்றோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது இந்த அரசாணை எண் 115யின் சாராம்சமாகும்.
பசுந்தோல் போர்த்திய புலி
அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையிலே மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது, மேல்போக்கான வார்த்தைகளாக இருக்கிறது. இந்த 115 அரசாணை பசுந்தோல் போர்த்திய புலியாகும். பார்ப்பதற்கு பசுவாகவும், ஆனால் புலியாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை தான் நாம் பார்க்கிறோம். ஆறு மாத காலத்திலே இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தபட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும்.
இளைஞர்களின் எதிர்காலம்
இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு காணாமல் போகும். இனி அரசு பணியாளர் என்கிற ஒரு நிலையை தமிழ்நாட்டில் இல்லை என்கிற ஒரு நிலை உருவாகிற ஒரு பேர்ஆபத்து இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது இளைய சமுதாயத்தை விழித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நன்மைக்காக, பாதுகாப்புக்காக உரிமை குரல் கொடுத்தார்.
இளைஞர்களை காத்தவர் இபிஎஸ்
இந்த ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் அரசு அறிவித்திருப்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்த அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த அரசாணை 115யை தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடி பழனிசாமி என ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.