வார்த்தையில் அப்படியொரு கவனம்.. செய்தியாளர்களிடம் பார்த்து பார்த்து பேசிய உதயநிதி.. என்ன காரணம்?
மதுரை: நான் எங்கேயும் போகப்போறது இல்லை. இங்கதான் இருப்பேன்.. முதலில் 7.5 லட்சம் கோடி ஊழல் பற்றி பேசுங்கள். மணிப்பூர் பற்றி பேசுங்கள்.. அதன்பிறகு சனாதனம் பற்றி பேசலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கலைஞரே ஆதரித்தாரு என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் எந்த நேரத்தில் ஆதரிச்சாரு சரி, முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி எதிர்த்தாரே அதற்கு என்ன பதில் சொல்றீங்க.. அவர் என்னவென்று சொல்லி எதிர்த்தாரு.. இதற்கும் பேட்டி கூட கொடுக்கவில்லை.. கடிதம் மட்டும் தான் எழுதுனாரு.. வெளியில் கூட தெரியக்கூடாது என்று பேட்டி கொடுக்காமல் கடிதம் மூலம் கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இப்ப ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வந்து என்ன சாதிக்க போறீங்க.. இப்ப கர்நாடகா தேர்தல் நடந்து ஆறு மாதம் ஆகிறது.. அந்த அரசை என்ன பண்ண போறாங்க.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அப்புறம் எந்த ஆட்சியும் கவிழாதா.. இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையை கிளப்பிவிட வேண்டும். இந்த 7.5 லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒவ்வொரு நாளும் பிரச்சனையை கிளப்புகிறார்கள்" என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்கள் அல்லவா? அதுபோல் பாரத் என்ற பெயர் மாற்றம் சரி எனறு சொல்கிறார்களே என கேட்டார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "பாரதம் என்று பெயர் மாற்றியதை பாராட்டுவதாக நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.. இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என்று பிரதமர் மோடி சொன்னார், அதுபோல் மாற்றிக்காட்டிவிட்டார்.. வாழ்த்துக்கள் தான்.." என்றார்.
சனாதனம் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து 200 வருடமாக பேசிக்கொண்டிருக்கிறோம்.. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம்.. ஆட்சி எல்லாம் அடுத்ததுதான்.. அதைவிட ரொம்ப முக்கியம் சமூக நீதி.. சமூக நீதிக்காக தொடங்கப்பட்டது தான் நம்முடைய இயக்கம். நான் தொடர்ந்து பேசுவேன்..
அதை விட முக்கியமான விஷயத்தை எல்லாருமே மறந்துடுவீங்க.. சனாதனம் குறித்து அம்பேத்கர் பேசியதை நான் பேசவில்லை.. கலைஞர் பேசியதை நான் பேசவில்லை.. தந்தை பெரியார் பேசியதை நான் பேசவில்லை.. அண்ணன் திருமாவளவன் பேசியதை நான் பேசவில்லை.. திமுக துணை பொதுச்செயலாளர் அண்ணன் ஆ ராசா பேசியதை நான் பேசவில்லை.. அதைவிட கம்மியாகவே நான் பேசியிருக்கிறேன்.. நான் பேச ஆரம்பித்துள்ளேன்.. எல்லாரும் பேச வேண்டும்..
அதைவிட ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் 2024 நாடாளுமன்ற தேர்தல்.. இந்த தேர்தலில் வென்று ஊழல் ஆட்சியை,இந்த பாசிச பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக நான் சொல்லவில்லை.. சிஏஜி சொல்லியிருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டும்..மணிப்பூர் என்ற மாநிலம் ஐந்து மாதமாக பற்றி எரிகிறது.. செய்தியாளர்களாகிய உங்களை அங்கு அனுமதித்திருக்கிறார்களா.. அங்கு இணையதள வசதி இல்லை.. கிட்டத்தட்ட300 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சுகள் இடிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அதை பற்றி பேசுவோம்.. அதற்கு அப்புறமாக சனாதனத்திற்கு வருவோம்.. நான் எங்கேயும் போகப்போறது இல்லை. இங்கதான் இருப்பேன்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications