மதுரையில் கனமழைக்கு இடையே.. அறுந்து கிடந்த மின்கம்பி.. மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி பலி
மதுரை: மதுரையில் இன்று கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. இந்த நிலையில் டிவிஎஸ் நகர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மளிகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்ப அலையின் காரணமாக மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். தினந்தோறும் 15 மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வந்தது.

எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் கூட சென்னையில் காலை நேரத்தில் மழை பெய்தது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
குறிப்பாக மதுரையில் இன்று மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மதுரை டிவிஎஸ் நகரில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரை டிவிஎஸ் நகரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர். கனமழையால் மின்கம்பத்தில் இருந்து மின்சார ஒயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இதில் பட்டதால் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.
மதுரை டிவிஎஸ் நகர் மீனாட்சி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர். வழக்கம்போல் கடைக்கு சென்றிருந்த அவர்கள் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தபோது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயர் பட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழையால் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications