திருப்பரங்குன்றம் மலை உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே எப்போதும் போல ஏற்றப்பட்ட மகா தீபம்!
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று விமரிசையாக நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், எப்போதும் போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்த வழக்கில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே இதன் மீதான மேல்முறையீட்டு மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யும்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்துக்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்டத் தடையில்லை. தர்காவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், அதற்கு பதிலாக மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலம் காலமாக நடந்து வந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அங்கு தீபம் ஏற்ற தடை விதித்தது. அதனால் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதை மாற்றி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது தமிழக அறநிலையத்துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி "பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோயில் தீப்பத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது, தவறான உள் நோக்கத்தில் ஆதாரமில்லாமல் மனு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
அரசு தரப்பு, வக்பு வாரியத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். பின்பு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில் "மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது இன்று காலை 7.30 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைரத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் மகாதீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இதற்கிடையே நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம் தரப்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் ரவிக்குமார் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications