ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது - ஐகோர்ட் கிளை ஆணை!
மதுரை: ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், ஒரு அரசை சிறப்பு சட்டம் இயற்றுமாறு நீதிமன்றத்தால் வற்புறுத்த முடியாது எனக் குறிப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழகத்தை உலுக்கிய ஆணவப் படுகொலை நிகழ்வுகளில் கவின் ஆணவப் படுகொலையும் ஒன்று. பட்டியலினத்தை சேர்ந்த இவர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். இவரும் மாற்றுச் சமூகத்தைப் பெண்ணும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கவினை படுகொலை செய்தார்.

பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவம் நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்தது. இந்த சம்பவத்தில் பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. பெண்ணின் தாய் மற்றும் தந்தை இருவரும் காவல் துறையில் உயரிய பொறுப்பில் இருந்தவர்கள். எனவே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன், என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், "இளைஞர் கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக நெல்லை மாவட்ட நீதிபதி முதல்நிலை விசாரணையை நடத்தவும், அவரது கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கைகள் அடங்கிய பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) நீதிபதிகள் சுரேஷ் குமார், வடமலை ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "கவின் ஆணவப் படுகொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கீழமையின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.
மேலும், கவினின் குடும்பத்திற்கு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஒரு அரசை சிறப்பு சட்டத்தை இயற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என குறிப்பிட்டு, பொன். காந்திமதி நாதன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications