விநாயகர் சிலை கரைப்பு.. அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த ஐகோர்ட் கிளை!
மதுரை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் விழாவுக்கான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்றனர்.

மதுரை, தென்காசி, திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியும், பல்வேறு மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சில மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் கரைக்கப்படுவது அவசியம்.
ரசாயன வண்ண பூச்சுகள் அல்லது பிற மக்காத பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது என சான்று வழங்கப்பட்ட சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கப்பட வேண்டும்.
இந்த சான்று பெறாத சிலைகளை பொறுத்தவரை செயற்கை நீர் நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவர்களின் உரிமை. அதே நேரத்தில் இந்த விழா பொறுப்பான முறையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தெளிவு படுத்துகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications