அறையில் கிடைத்த ஐடி ஆவணங்கள்.. சிறையிலுள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் கிளை அதிரடி
மதுரை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங்கள், சசிகலா கையில் சிக்கியது எப்படி என்று, சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றார். அவர் மீதான புகார் குறித்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை என்று தலைமை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆவணங்கள் சசிகலாவின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அந்த ஆவணங்களை கண்டுபிடித்தனர். டி.கே.ராஜேந்திரனுக்கு உதவி செய்வதற்காக இந்த வருமானவரித்துறை கடிதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே ராஜேந்திரன் பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதி சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அரசில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத சசிகலா, அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், சசிகலா மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.