"36 மாதம் என சொல்லிவிட்டு.." மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை அமைக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதன் கட்டுமானமே இன்னும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையே மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவாக நிதியை ஒதுக்கி, பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் ரமேஷ் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தமும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. மதுரைக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் கட்டுமானங்கள் முடிந்துவிட்டது.
இந்த விவகாரம் கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் கூட எதிரொலித்தது. இது குறித்து ரமேஷ் தொடர்ந்த வழக்கு அப்போது விசாரணைக்கு வந்த 36 மாதங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து அப்போது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்றத்தில் கூறப்பட்டது போல் எந்தவொரு பணிகளும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அவமதிப்பு வழக்கு: மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனப் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, நிதித்துறை செயலாளர் ஸ்ரீதருண் பாலாஜி, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பஸ்வான் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சரமாரி கேள்வி: அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முடிவு செய்வது இறுதிக் கட்ட நிலையில் உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டும் இன்று வரை கட்டி முடிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications