கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு படம் இங்கே? இதென்ன விளம்பர வாசகம் மாதிரி.. நீதிபதி சரமாரி கேள்வி!
மதுரை: கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள், அதன் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சடிக்கவில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கூல் லிப் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் "இறக்கும் வரை இளமையாக இருக்கலாம்" என புரிந்துகொள்ளும் வகையில் உள்ளதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா போதை பொருட்களை முற்றிலும் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 3 நிறுவனங்களை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து, அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குட்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழ்நாட்டில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 10% இளைஞர்கள் ஏதேனும் ஒரு போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என அறிக்கை கூறுகிறது. குடும்ப பிரச்சனை, தனிநபர் துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் போதை மருந்துகளை இளைஞர்கள் நாடுகின்றனர். கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை, கோட்பா விதிகளால் முறைப்படுத்தப்படுகிறது. கோட்பா விதிகளின் படி எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்பட்டுள்ளது" என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி, "மெல்லும் வகையிலான போதை பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் கோட்பா விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கூல் லிப் பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. அதனை "புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்" என பொருள் கொள்ளாமல், "இறக்கும் போதும் இளமையாக இருக்கலாம்" என தவறாக புரிந்து கொண்டால், அது விளம்பரம் போல் ஆகிவிடும். ஆகவே புகையிலை போதைப்பொருட்களின் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு அடையாளம் அச்சிடப்படுவது தொடர்பாக குட்கா நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்யாத மாநிலங்களிலும், தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு மீண்டும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கு வேறு எந்த மாதிரியான எச்சரிக்கைகளை வழங்கலாம்? என்பது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications