இந்து அறநிலையத்துறையா அல்லது வசூல் ராஜாவா.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
மதுரை:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்து சமய அறநிலையத்துறை கடுமையாக கண்டித்தது. அறநிலையத்துறையினர் முறையாக கோயில்களை பராமரிப்பதில்லை என்றும் மாறாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல வசூலை மட்டும் செய்கின்றனர் என்றும் நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையினரால் இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளதாக கூறி சென்னை வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் 12 குருக்கள் மற்றும் 19 உதவி குருக்கள் பணிகள் உள்ளன. அதில், 2 குருக்கள் மற்றும் 7 உதவி குருக்கள் மட்டுமே பணியில் உள்ளனர் மீதமுள்ள குருக்கள், உதவி குருக்கள் என மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும், இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் வருகிறது. ஆனால், உரிய பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மனுவில், போதிய வருவாய் கிடைத்தும் கோயில் பராமரிப்பு, பணியிட நியமனம் போன்றவற்றில் இந்துசமய அறநிலையத்துறை கவனம் செலுத்துவதில்லை என்றும குற்றம் சாட்டப்பட்டடது. இதையடுத்து நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு, ராமேஸ்வரம் கோயில் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, கோயிலின் ஆண்டு வருமானம் என்ன?, வருமான தொகை எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கில் நீதிபதிகள் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையினர் மீது கடும் அதிருப்தியை பதிவு செய்தது. அறநிலையத்துறையினர் முறையாக கோயில்களை பராமரிப்பதில்லை. மாறாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல வசூலை மட்டும் செய்கின்றனர் என்றும் விமர்சனம் செய்தனர்.
பின்னர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் எத்தனை பணியிடங்கள் உள்ளன, அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன, மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, கோயிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு, கோயில் பராமரிப்பு செலவு போக மீதம் உள்ள பணம் என்னவாகிறது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அறிக்கை தர வேண்டும் என ராமநாதசுவாமி கோயிலின் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications