திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்படும் போலீஸ்! நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூட்டம்! உச்சக்கட்ட பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவமதிப்பு வழக்கில் இன்றே மலை உச்சியில் தீபத்தை ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை உச்சியில் இருக்கும் மகா தீபத்தூணில் கார்த்திகை ஏற்ற வேண்டும் எனச் சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
தீபம் ஏற்ற உத்தரவு
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டியே மனுதாரரை போலீசார் மலைக்கு மேல் அனுமதிக்காமல் இருந்தனர். இதைக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், மலை உச்சியில் தீபத்தை ஏற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். நாளை காலை உத்தரவு நிறைவேற்றிய நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
போலீஸ் குவிப்பு
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் தீபம் ஏற்றப்படும் என தெரிகிறது. 144 ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே அங்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் குவிய ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காலம் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறார். மலையின் மீது மனுதாரர் மட்டுமே ஏறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கீழே இருந்தபடி தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
நீதிபதி என்ன சொன்னார்
மேலும், இன்று மாலை தீபம் ஏற்றப்படும்போது மதுரை மாநகரக் காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மதுரை மாநகரக் காவல் ஆணையர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து இருக்கிறர். அடிவாரம் மற்றும் மலையின் மீது தீபம் ஏற்றப்படும் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications