சொந்தப்பணத்தை வாரி இறைக்கும் டாக்டர் சரவணன்... நிவாரணப் பணிகளிலும் உட்கட்சி அரசியல்
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், மருத்துவ அணி நிர்வாகியுமான டாக்டர் சரவணன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சொந்தப் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
தினமும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விசிட் அடிக்கும் இவர், அங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். அதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை உடனடியாக அந்த இடத்தில் இருந்தே தொடர்பு கொண்டு பேசி தீர்வு காண்பதற்கு வழியமைத்துக் கொடுக்கிறார்.

மதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் டாக்டர் சரவணனை மதுரை திமுக நிர்வாகிகள் சிலர் வேண்டாத வெறுப்போடு தான் பார்த்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் கொரோனா கால நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாநகர திமுக நிர்வாகி ஒருவர், யாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் ரூ.50 லட்சம் வரை தனது சொந்த நிதியை சரவணன் செலவழித்துள்ளார் என்றும் ஆனால் அவரின் செயல்பாடுகள் இங்குள்ள ஒரு சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மதுரை புறநகர் செயலாளரான மூர்த்தி, தனது மாவட்டத்திற்குட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, போன்ற பகுதிகளில் ஓரளவு நிவாரணப் பொருட்களை வழங்குகிறார் என்றும் மதுரை மாநகர செயலாளரான கோ.தளபதி தான் செலவு செய்ய தடுமாறுகிறார் எனவும் கூறினார். மேலும், கோ.தளபதி நிர்வாகிகளை கைகாட்டி விட்டு சென்றுவிடுவதாகவும் இதனால் அவர்கள் உதவிப் பொருட்கள் வழங்க சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை கோ.தளபதி செய்த ஒரே உதவி மதுரை திருநகரில் உள்ள தனது திருமண மண்டபத்தை நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு இலவசமாக கொடுத்தது தான் என்றும் தனது மாநகர செயலாளர் பதவிக்கு சரவணன் போட்டியாக வந்துவிடுவாரோ என கோ.தளபதி அஞ்சுவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications