கொடைக்கானல் பங்களா.. நடிகர் பிரகாஷ்ராஜூக்கு புது சிக்கல்.. பாபி சிம்ஹாவுக்குமே.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல், விதிகளை மீறி பங்களா கட்டிவருவதாக சர்ச்சை கடந்த செப்டம்பர் மாதம் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதி மீறி பங்களா கட்டிவருவது குறித்து பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

இது தொடர்பாக மகேந்திரன் அப்போது கூறுகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், நடிகர் பிரகாஷ் ராஜ் 7 ஏக்கரும், பாபி சிம்ஹா ஒரு ஏக்கரும் நிலம் வாங்கியிருந்தார். அந்த நிலத்தில் நடிகர்கள் இருவரும் விதிகளை மீறி பங்களா கட்டிவருகிறார்கள். மேலும் கட்டட வரைபடம் கொடுத்து முறையான மின் இணைப்பும் பெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் பாபி சிம்ஹா, கொடைக்கானல் - பழனி சாலையில், பெருமாள் மலையை அடுத்து உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பேத்துப்பாறையில் எனது பெற்றோருக்காக வீடு கட்டினேன். ஒருகோடியே 70 லட்சம் கொடுத்தேன். இதில் ஒப்பந்ததாரர் என்னை ஏமாற்றிவிட்டார். இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். என்னையும் தடுத்து வருகின்றனர். நான் போலியாக பட்டா வைத்து விதிமுறைகளை மீறி கட்டியதாகவும் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். சரியான ரெக்கார்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன என்று குற்றம்சாட்டினார். மேலும் பாபி சிம்ஹா போலீசில் புகாரும் அளித்தார்.
இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், ஜேசிபி வைத்து கட்டட பணிகளை மேற்கொள்வதாகவும், பொதுப்பாதையை மறித்து சிமென்ட் சாலை அமைத்துள்ளதாகவும் பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த வருவாய்துறை அதிகாரிகள், பொதுப்பாதையை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமிக்கவில்லை என அப்போது விளக்கம் அளித்தனர்.அதேநேரம் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டதா இல்லையா என்பது குறித்து எந்த பதிலும் வரவில்லை..
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டுவை சேர்ந்த எஸ்.முகமது ஜூனத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அந்த மனவில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் போத்துப்பாறை. இந்த கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டி இருக்கிறார்கள். கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின் படி முறையாக அனுமதி வாங்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க கட்டிட விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.
ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் பேத்துப்பாறை பகுதியில் பங்களா கட்டி உள்ளார்கள். இது தொடர்பாக புகார் அளித்தாலும் இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கொடைக்கானல் பேத்துப்பாறையில் அரசின் அனுமதி பெறாமல் ஜெசிபி, பொக்லைன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்திருக்கிறார்கள் எனவே உரிய அரசின் அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு எஸ்.முகமது ஜூனத் தனது மனுவில் கூறியிருந்தார்-
இந்த மனு செனனை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 4000 சதுர அடி கட்டியிருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர். இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு இந்த விசாரணை ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications