மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கமில்லை... திருப்பரங்குன்றத்தில் போராடுவது ஏன்.. எல் முருகன் விளக்கம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும், தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுகின்ற வகையில், நயவஞ்சக செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட சமூக விரோதிகளை எதிர்த்து மட்டுமே இந்தப் போராட்டம் திட்டமிடப்பட்டது என்றும் மதக் கலவரம் உருவாக்குகின்ற நோக்கத்தில் போராட்டம் அறிவிக்கப்படவில்லை என்றும் எல் முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையப்படுத்தி, இந்து விரோத அரசியலை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்ற 'போலி திராவிட மாடல்' திமுக அரசு, இந்து முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பாஜக தலைவர்களை கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வணங்கப்பட்டு வருகின்ற திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டவர்களை தடுக்க திராணியற்ற இந்த திமுக அரசும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற 'காவல் துறையும்', இன்று இந்து அமைப்பினர் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் என்று கூறி, தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினரை கைது செய்து வருவது சர்வாதிகாரத்தின் உச்சம்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் கடைபிடிப்பதாக கூறி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றபோது ஏன் இந்தக் காவல்துறை தடுக்கவில்லை? அப்போது இந்த அடாவடித்தனமான கைது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்?
கடந்த மாத இறுதியில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், ஜனநாயக நாட்டில் மக்கள் போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறக்கூடாது என்றும் மாண்புமிகு நீதிபதிகளால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க, இன்றைய போராட்டத்திற்கு திமுக கைப்பாவையான காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன், அத்துமீறி அனைவரையும் கைது செய்து வருகிறது.
மதக் கலவரம் உருவாக்குகின்ற நோக்கத்திலோ, தமிழகத்தில் உள்ள மற்ற மதத்தினருக்கு எதிரான நோக்கத்திலோ, இந்து அமைப்பினரால் இன்று போராட்டம் அறிவிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுகின்ற வகையில், நயவஞ்சக செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட சமூக விரோதிகளை எதிர்த்து மட்டுமே இந்தப் போராட்டம் திட்டமிடப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை இழந்து விடக்கூடாது என்பதற்காக, நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் நாடகங்கள் அனைத்தும் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications