உதயநிதி ஸ்டாலினின் சோகத்தை மறக்கடித்த மதுரை! தாய்மார்கள் தந்த அமோக வரவேற்பு! மூர்த்தியால் கீர்த்தி!
உதயநிதியை உற்சாகம் கொள்ள வைத்த மதுரை விசிட்.
மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு மிகுந்த சோகத்துடன் கடந்த 5ஆம் தேதி இரவு விமானத்தில் வந்திறங்கிய நிலையில், அங்கு தாய்மார்கள் தந்த உற்சாக வரவேற்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
மதுரையில் தனக்கு இப்படியொரு வரவேற்பும் ஆரவாரமும் கிடைக்கும் என்பதை சிறிதும் எதிர்ப்பார்க்காத உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியை பாராட்டு மழையில் நனைத்துவிட்டார்.
ஆனால் அதே விழா மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி உதயநிதி ஸ்டாலின் வாய்திறக்கவில்லை.

சோகத்துடன் உதயநிதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சித்தி சாருமதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கையோடு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 5ஆம் தேதி இரவு மதுரை சென்றடைந்தார். அப்போது தனது சித்தி மறைந்த சோகம் ஒரு பக்கம் என்றால், தங்கையை இழந்து அழுதுகொண்டிருக்கும் தனது தாய் துர்கா ஸ்டாலினை எப்படி தேற்றுவது, இந்த துயர நிகழ்வை எப்படி மறக்கடிக்க செய்வது என்பன உள்ளிட்ட பல சிந்தனைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு இருந்திருக்கின்றன.

உதயநிதி உற்சாகம்
இதனிடையே சோகத்தை மனதிற்குள் வைத்துக் கொண்டு கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி என மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தன்னை, தாய்மார்கள் உற்சாகத்துடன் வரவேற்றதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார். அரசு விழாவையே கட்சி மாநாடு போல் பிரம்மாண்டமாக அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்ததால் உதயநிதி உற்சாகமானார்.

பாராட்டு மழை
விழா மேடையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி பெரிதாக எதையும் பேசாத உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியை போதும் போதும் என்கிற அளவுக்கு பாராட்டி தள்ளிவிட்டார். ''வழக்கமாக ஒரு நிகழ்ச்சிக்கு தேதி வாங்குகிறோம் என்றால், 'இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி. அதுக்கு நீங்க வரணும்' என்றுதான் கேட்டு தேதி வாங்குவார்கள். ஆனால் மூர்த்தியோ, எந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்குவதாக இருந்தாலும், 'அது என்ன நிகழ்ச்சி' என்று சொல்லமாட்டார். '25 ஆயிரம் பேர் வருவாங்க உதயா, 50 ஆயிரம் பேர் உதயா, 75 ஆயிரம் பேர் உதயா' என்றுதான் ஆரம்பிப்பார்.'' என உதயநிதி கூறினார்.

சமீபத்தில் தேதி
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை உதயநிதி ஸ்டாலினை மதுரைக்கு அழைத்து வந்து விழா நடத்தியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட உதயநிதி ஸ்டாலினிடம் சமீபத்தில் தான் தேதி வாங்கியிருந்தார் அமைச்சர் மூர்த்தி.












Click it and Unblock the Notifications