மோடியும் ஹிட்லர் போலத்தான்.. பாசிசவாதி.. வைகோ கடும் தாக்கு
மதுரை: "பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். அதற்காக ஹிட்லரை போல செயல்படுகிறார்" என்று வைகோ கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் மோடி அக்கறை காட்டவில்லை என்று வைகோ விமர்சித்திருந்தார். அப்போது விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாடு போவது என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தரப்பில் பெரும் கண்டனம் எழ ஆரம்பித்தது.
இதற்கு நடுவில் மேகதாது விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் என்று வைகோ கர்ஜித்தார்.

கடும் கண்டனம்
வைகோவின் இந்த பேச்சுக்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்போது திரும்பவும் மோடியை பற்றி குற்றஞ்சாட்டி உள்ளார் வைகோ. மதுரை தல்லாகுளத்தில், அம்பேத்கார் நினைவு நாளையொட்டி அங்கிருந்த அவரது சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார்.

மோடி ஒரு பாசிசவாதி
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ சொன்னதாவது: "பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட ஒருபோதும் விரும்பமாட்டார். நாடாளுமன்றத்துக்கு தீயை வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மீது அன்று பழியை போட்டவர்தான் ஹிட்லர்.

ஓட்டுக்கு பணம்
அது போலதான் பிரதமர் மோடியும். தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க எந்த அளவுக்கும் போகக்கூடியவர். இதுவரை எத்தனையோ முறை வட மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் ஓட்டுக்கு பணம் என்பதை பாஜகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

கூட்டாட்சி தத்துவம்
அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications