கஞ்சா விற்பனை.. போலீஸை அதிர வைத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.. இன்று எழுப்பிய ஆறு கேள்விகள்
மதுரை: போலீஸ் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று கேள்வி எழுப்பி உள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி, 7 பேர் போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக கான்முகமது என்பவர் வந்து கொண்டிருந்தார், அவர் மீது போதையில் இருந்த இளைஞர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதன்பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். போலீசின் முழு ஒத்துழைப்புடன்தான் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது.இதனால் கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் யாருமே போலீசிடம் சென்று புகார் அளிக்க முன்வருதில்லை.
ஆகவே ஒத்தக்கடை பகுதியில் உள்ள நீலமேக நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மது மற்றும் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடுபவர்கள், மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவை உருவாக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை ஒத்தக்கடைப் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை. கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலீஸின் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்? என கேள்வி எழுப்பினர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை டிஜிபி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications