பஞ்சமி நிலம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மேஜர் உத்தரவு.. நிலம் வாங்குவோர் பாருங்க
மதுரை: டி.சி நிலம் (Depressed Class Land ) என்று அழைக்கப்படும் பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற ஏழைகளுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட நிலம் ஆகும்.இந்த நிலத்தை ஆதிதிராவிடர் சமுதாயம் அல்லாத பிற சமூகத்தினர் பத்திரப்பதிவு செய்யவும், பட்டா பெயர் மாற்றம் செய்யவும் முடியாது. இந்நிலையில் பஞ்சமி நிலம் என்றே தெரியாமல் வாங்கிய பலர் உள்ளனர். அதேபோல பஞ்சமி நிலம் என்று தெரிந்தே ஆக்கிரமித்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட விளை நிலங்ளைத்தான் பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்று அழைக்கிறோம். A.D.Patta - ஆதிதிராவிடர் பட்டா இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

ஆங்கிலேயர் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் பல லட்சம் நிலங்கள் இப்போது மாயமாகிவிட்டன.
பஞ்சமி நிலம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கடந்த இரண்டு ஆண்டுகக்கு முன்பு வெளியாகியது. அதன்படி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களுக்குத் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் மொத்த பரப்பளவு சுமார் 12 லட்சம் ஏக்கர் என்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது பஞ்சமி நிலங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் மட்டுமே கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.
பட்டியல் சமூக மக்களுக்காக தற்போது உள்ள ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 113 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 11 ஆயிரத்து 556 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் பரப்பளவு சுமார் 11,556 ஏக்கர் என்று ஆர்டிஐ தகவலில் தெரியவந்தது. இந்நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கி உள்ளது. தென்காசியைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பினை பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் புளியரை பகவதிபுரத்தை சேர்ந்த கென்சி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஏராளமான பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவை ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டியவை ஆகும். ஆனால் இந்த பஞ்சமி நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இதனால் என்னை போல வீடு, நிலம் இல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த பலனும் இதுவரை ஏற்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஏழைகளுக்கு பிரித்து வழங்கும்படி உத்தரவிட வேண்டும் " இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி கூறுகையில், மனுதாரரின் மனுவை செங்கோட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் பரிசீலித்து பஞ்சமி நிலங்களை தகுதி அடிப்படையில் உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications