"தீண்டாமையை அனுமதிக்க முடியாது" தலித் மக்களுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினை அனுமதிக்காத வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த உத்தரவின் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்களநாடு கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்லி எம்.மதி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை நீதிபதி பி.டி. ஆஷா விசாரணை செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பி.டி. ஆஷா முக்கிய தீர்ப்பை அளித்திருந்தார். இதற்கிடையே இதில் அவர் அளித்த தீர்ப்பின் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில், "நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைப் பார்த்து நாம் தலைகுனிய வேண்டும். மத சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்திய இந்த நாட்டில், இந்த வழக்கின் மனுதாரர் உட்பட விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தோரால் அனைவருக்கும் சொந்தமான இறைவனைக் கோயிலுக்குச் சென்று வணங்கக் கூட முடிவதில்லை.
மனுதாரர் முருகன் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் கோவிலுக்குள் நுழைய விடாமல் சிலர் தடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒதுங்கி இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் அமைதியாக இருக்க முடியாது. தீண்டாமைப் பழக்கத்தைத் தொடர அனுமதிக்க முடியாது. எனவே, டிசம்பர் 13, 2021இல் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற அமைதிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்கி அனைத்து தரப்பினரும் கோயிலுக்குச் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
அதில் எடுக்கப்பட்ட முடிவைச் செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அந்த கூட்டம் சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை என்ற போதிலும், முருகன் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, அதில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications