ஆவின் பாலில் மிதந்த "ஈ".. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. மதுரை ஆவின் உதவி மேலாளர் சஸ்பெண்ட்!
மதுரை: மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ மிதந்த சம்பவத்தை அடுத்து மதுரை ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆவின் மூலம் நாள்தோறும் பல்வேறு டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகமலை, புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஒரு டெப்போவில் மேலமாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிச் சென்றார்.

அப்போது அந்த பாக்கெட்டின் உள்ளே ஈ மிதப்பதாக அந்த பெண் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஆவின் அதிகாரிகள் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பால் பாக்கெட்டுகளை பேக் செய்யும் போது கவனக்குறைவு இருந்திருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காலி பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் பெங்களூரை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பால் தயாரிப்பு பணியின் போது கவனக்குறைவாக இருந்ததால் மதுரை ஆவின் பால் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் பொது மேலாளர் சாந்தி பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications