நித்தியானந்தா எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. ஆதீனத்திற்கு வந்தால் கைது செய்யப்படுவார்..' மதுரை ஆதீனம்
மதுரை: நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய மதுரை ஆதீனம், அவர் மதுரை ஆதீனத்திற்கு வந்தால் கைதாகிவிடுவார் என்றும் தெரிவித்தார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முடிசூட்டப்பட்டார்.
இதனிடையே இன்று 293ஆவது மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞாமசம்பந்த தேசிக சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள். எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன்" என்றார்
தொடர்ந்து நித்தியானந்தா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவரையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார்" எனப் பதிலளித்தார்.
மேலும், சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவர், "சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன். கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களும் இந்து சமயத்தில் தரப்படும் விபூதியைப் பூசிக்கொள்வார்களா? இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த வாரம் நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில், "மதுரை ஆதீனத்தின் 293வது சன்னிதானமாகப் பதவியேற்றுக் கொண்டு உள்ளேன். இனிமேல் இணையம் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளேன். கடந்த 2012ம் ஆண்டு, ஏற்கனவே அருணகிரிநாதரால் இளைய ஆதீனமாக நான் அறிவிக்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications