மதுரை விமான நிலைய சம்பவம்.. அமமுக நிர்வாகி புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட ராஜேஸ்வரன் புகாரின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு
மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட விவகாரத்தில் தன்னை தாக்கியதால் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 11 மணியளவில் மதுரைக்கு வந்தார். விமான நிலைய உள்வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கினார்.
அப்போது வெளிய வருவதற்காக சிறிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தில் அவருடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
மேலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டே எதிர்ப்பு கோஷமிட்டார். உடனே பேருந்தில் வந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் , அந்த நபர் வீடியோ எடுக்கக் கூடாது என தடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

சமூகவலைதளங்களில் வைரல்
இந்த வீடியோவை அவர் சமூகவலைதளங்களில் வைரலானது. விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தரக்குறைவாக கோஷமிட்ட நபர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என்பதும் இவர் அமமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக சொந்த ஊரான மதுரை்கு சென்றது தெரியவந்தது.

விசாரணை
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜேஸ்வரன் அவணியாபுரம் போலீஸில் நேற்று மாலை ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் அவரது பாதுகாவலர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் என்னை தாக்கியதுடன் என்னிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

6 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜேஸ்வரனிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications