மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி நிறைவடைந்துள்ளது. 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அற்புதமாக நடந்து முடிந்திருக்கிறது. 749 காளைகளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த 12 காளைகளை அற்புதமாக அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
Recommended Video
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு புகழ் பெற்றது அலங்காநல்லூர். காணும் பொங்கல் நாளில் ஆண்டுதோறும் இங்கு ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும். தமிழகத்தில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் பிரபலமானது.
இன்றைய தினம் அலங்காநல்லூரில் நடைபெற்ற போட்டிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
முடிந்தால் தொட்டுப்பார் என்று களமாடின காளைகள்... இதற்குத்தானே காத்திருக்கிறோம் என்று மீசையை முறுக்கி விட்டு வீரத்துடன் காளையை பிடித்து தங்கக் காசுகளை தட்டிச்சென்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

அண்டா முதல் தங்கக்காசுகள் வரை
காலை 9 மணியில் தொடங்கி மாலை 5 மணி வரை 749 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்ற இன்றைய போட்டியில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா முதல் தங்கக் காசுகள் வரை பரிசாக வழங்கப்பட்டது.

குருவித்துறை காளைக்கு கார் பரிசு
போட்டியில் பங்கேற்ற பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்தன. பல காளைகள் நின்று நிதானமாக களமாடின. தொட்டால் முட்டிவிடுவேன் என்று பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை. அந்த காளைக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது.

கண்ணனுக்கு கார் பரிசு
வீட்டில் கூட சொல்லாமல் விடிகாலையிலேயே அலங்காநல்லூருக்கு வந்து போட்டியில் பங்கேற்ற விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் 12 காளைகளை அடக்கினார். அதிக காளைகளை அடக்கிய வீரர் என்ற பெயரை தட்டிச்சென்றதோடு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இதே போல 9 காளைகளை அடக்கிய கருப்பணன், 8 காளைகளை அடக்கிய சக்தி ஆகியோர் அடுத்தடுத்த இரண்டு இடங்களைப் பிடித்து பரிசுகளை பெற்றனர்.

காளைகளால் காயமடைந்த வீரர்கள்
749 காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 பங்கேற்று களமாடினர். காளைகளை தொட முயன்ற பல வீரர்களை முட்டி தள்ளி தூக்கி வீசியதில் 52 பேர் காயமடைந்தனர். போட்டி நடைபெறும் இடத்திலேயே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் நல்ல படியாக நடந்து முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.












Click it and Unblock the Notifications