இளைஞர் அஜித் குமார் வழக்கு.. மதுரை நீதிபதி விசாரிக்க உத்தரவு.. ஜூலை 8ல் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
மதுரை: சிவகங்கை அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நீதி விசாரணை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மிருகத்தனமாக தாக்கப்பட்டு அஜித் குமார் இறந்துள்ளார் என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவதாக கூறிய நீதிபதிகள், முதற்கட்ட இடைக்கால அறிக்கையை ஜூலை 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறை தாக்குதலால் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் முன் விசாரணைக்கு வந்தது.

மதுரை ஐகோர்ட்டில் விசாரணை
அப்போது மதுரை அரசு மருத்துவமனை டீன் தரப்பில் அஜித் குமார் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் நீதிபதிகள், கொலை செய்பவர் கூட இதுபோல் தாக்க மாட்டார்கள். இந்த சம்பவம் அனைத்தும் கோயிலில் நடந்துள்ளது. ஆனால் கோயில் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்படவில்லை. வழக்கை இப்படி கையாண்டால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்?
மிளகாய் பொடி
ஏன் வழக்கை முறையாக கையாளவில்லை.. இவ்வாறு இருந்தால் விசாரணை எவ்வாறு நடைபெறும்? இந்த விவகாரத்தில் காவலர்கள் கைது நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பு. அஜித் குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிறப்புறுப்பிலும், வாயிலும் மிளகாய்ப் பொடி கொட்டி இருக்கின்றனர்.
ரூ.50 லட்சம் பேரம்
அஜித் குமார் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தருவதாக திருமண மண்டபத்தில் வைத்து சிலர் பேரம் பேசி இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நீதி விசாரணை
தொடர்ந்து, அஜித் குமார் மரணம் தொடார்பான வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், மிருகத்தனமாக தாக்கப்பட்டு அஜித் குமார் இறந்துள்ளார் என்பது உடற் கூராய்வு அறிக்கை மூலமாக தெரிகிறது. கொலை செய்பவர் கூட இதுபோல் தாக்க மாட்டார்கள்.
சிசிடிவி காட்சிகள் முக்கியம்
காவல் நிலையம், கோயில் என வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். தொடர் லாக் அப் மரணங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றன், வழக்கு தொடர்பான அத்தனை ஆவணங்களையும் நீதிபதியிடம் நாளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் முழுமையான விசாரணையை நீதிபதி ஜான் சுந்தர்லால் தொடங்க வேண்டும். முதற்கட்ட இடைக்கால அறிக்கையை ஜூலை 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications