எல்லா அரசு அதிகாரிகளும்.. வாரத்திற்கு ஒரு நாள் இதை செய்யணும்! மதுரை ஆட்சியர் ஸ்ட்ரிக்ட் உத்தரவு
மதுரை: அரசு அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்
பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்டவை தான் நாம் இப்போது சந்தித்து வரும் மோசமான பிரச்சினையாக உள்ளது.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். வளர்ந்த நாடுகளும் இதற்குத் தப்பவில்லை

புவி வெப்ப மயமாதல்
கடந்த ஆண்டு கூட அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான வெப்ப அலை ஏற்பட்டது. இதனால் கனடா நாட்டில் பல இடங்களில் வெப்பநிலை 121 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. அமெரிக்கா, கனடா நாடுகளில் மட்டுமே சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த வெப்ப அலை காரணமாக உயிரிழந்தனர். இதேபோல பல நாடுகளும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் நிலைமை மோசமாகலாம் என்றே அஞ்சப்படுகிறது.

காற்று மாசு
குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாகவே அறியப்பட்ட கனடாவில் வெப்பம் இவ்வளவு தூரம் அதிகரித்ததே நிலைமை எந்தளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. இதனால் சுற்றுச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டிய காரணம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் கடும் காற்று மாசு சிக்கலை எதிர் கொண்டுள்ளன.

நகரங்கள்
டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் காற்று மாசு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. வாகனங்கள் வெளியிடும் இந்தப் புகை காற்று மாசை மட்டும் அதிகரிப்பதில்லை புவி வெப்ப மயமாதலுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் முக்கிய முன்னெடுப்பைச் செய்துள்ளார்.

மதுரை ஆட்சியர்
அதாவது வாரத்திற்கு ஒரு நாள், அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார். வாரம்தோறும் புதன்கிழமைகளில் பேருந்துகள் அல்லது சைக்கிளை பயன்படுத்தியோ அல்லது நடந்தோ அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருமாறு ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும் முடிந்தவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications