மதுரையில் அமையும் ஃபுட் ஸ்ட்ரீட்.. எங்கு தெரியுமா? மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!
மதுரை: 2025-26ஆம் நிதியாண்டுக்கான மதுரை மாநகராட்சி தரப்பில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேயர் இந்திராணி பொன்வசந்த் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் மாட்டுத்தாவணியில் ஃபுட் ஸ்ட்ரீட், மேம்பாலங்களில் அலங்கார மின் விளக்குகள் மற்றும் செடிகள் அமைக்கவும், ஸ்மார்ட் ரோடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேயர் இந்திராணி பொன்வசந்த் பட்ஜெட் தாக்கல் செய்த போது, திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சாமானிய மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

அதேபோல் சென்னை, கோவை மாவட்டங்களுக்கு பின் அதிக சொத்து வரி வருவாயில் மதுரை மாவட்டமே உள்ளது. இதனால் வேகமான நகரமாக வளர்ந்து வரும் மதுரைக்கு என்ன மாதிரியான புதிய திட்டங்களை மாநகராட்சி மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சாலைகளை கண்டறிந்து ஸ்மார்ட் ரோடு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஒளி ஒலி அமைப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட மேம்பாலங்களில் ரூ.1 கோடி மதிப்பில் அலங்கார மின் விளக்குகள், செடிகள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சாலைகளில் மின் விளக்குகள் அமைக்கப்படாத நிலையில், இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.4 கோடியும், நகருக்குள் வனம் என்ற பெயரில் பசுமைக் காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளக்கல் புல்பண்ணை பகுதிகளில் சோலார் பேனல்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டல் மேற்கொள்ளப்படும் என்றும், மாட்டுத்தாவணி பகுதியில் ஃபுட் ஸ்ட்ரீட் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டிலும் 2 ஃபிட் ஸ்ட்ரீட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக மதுரையிலும் ஃபிட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட்டால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். ஏனென்றால் மதுரையில் கோயில் மற்றும் திரையரங்குகள் தவிர்த்து பெரியளவில் பொழுதுபோக்கு இடங்கள் கிடையாது. இதனால் தெப்பக்குளம், ஆரப்பாளையம் பை-பாஸ் பகுதிகளில் அதிக கடைகள் அமைத்து உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதனை ஒழுங்குபடுத்தும் வகையில் மாநகராட்சியே முன் வந்து ஃபுட் ஸ்ட்ரீட் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் அருகில் ஃபுட் ஸ்ட்ரீட் கொண்டு வரப்பட்டால், தொழில்முனைவோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்.
.












Click it and Unblock the Notifications