பெரியார் மண்ணா? பெரிதாக வெடிக்கும் வரதட்சணை பஞ்சாயத்து.. விருதுநகர் இன்ஸ்பெக்டரை பிடிக்க தனிப்படை
மதுரை: மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகாரில், தலைமறைவாக உள்ள காவலர் மற்றும் அவரது தந்தை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் வரதட்சணை பெயரில் நடக்கும் வன்கொடுமைகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வரதட்சணை கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவரே, இந்த கொடுமையை அரங்கேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கப்பிரியா எனும் இளம் பெண்ணுக்கும், மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்த காவலர் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர், மணப்பெண் வீட்டில் சொன்ன அளவுக்கு நகை போடவில்லை என்று தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக வரதட்சனையை காரணம் காட்டி தங்கப் பிரியா மீது குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் தங்கப் பிரியா மீதான தாக்குதல் உச்சத்தை தொட்டிருக்கிறது. கடுமையான தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் தங்கப் பிரியா சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார். இதனையடுத்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக உள்ள கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக உள்ள அவரது தந்தை செந்தில்குமரன், பூபாலனின் தாய் விஜயா, தங்கை அனிதா என 4 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
திருமணத்தின்போது 60 சவரன் அளவுக்கு தங்க நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனால் இன்னமும் வரதட்சனை வேண்டும் என்று கேட்டு தன் மீது பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தங்கப் பிரியா புகார் கொடுத்திருக்கிறார். புகாரையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், காவலர் பூபாலன் மற்றும் அவரது தங்கை அனிதா பேசிக்கொண்டதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தான் எப்படி மனைவி தங்கப்பிரியாவை தாக்கினேன் என்பது குறித்து பூபாலன் விளக்கியுள்ளார். இதை கேட்டு தங்கை அனிதா சிரிக்க, இருவரும் அதை குற்றம் என்று கருதாமல் விவாதித்திருக்கிறார்கள்.
தான் அடித்ததில் தங்கை பிரியாவின் கழுத்து, வாய், முகம் உள்ளிட்டவற்றில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பூபாலன் கூறியிருக்கிறார். இதில் பூபாலனின் தந்தை மற்றும் தாய் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் இந்த ஆடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், தற்போது 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூரில் சில நாட்களுக்கு முன்னர் ரிதன்யா எனும் புதிதாக திருமணமான இளம்பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விவாதங்கள் இன்னும் குறையாத நிலையில், தற்போது மீண்டும் வரதட்சணை பிரச்சனை வெளியில் வந்திருக்கிறது.
பெரியாரின் கொள்கைகளை வழிகாட்டியாக கொண்டு இயங்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. இருப்பினும் இன்னும் தமிழ் மண்ணில், பெரியார் மண்ணில் வரதட்சணை கொடுமையை முடிவுக்கு கொண்டு வராமல் இருப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications