சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்.. மதுரையில் வரி பாக்கியை குறைக்க லஞ்சம்! கையும் களவுமாகப் பிடித்த சிபிஐ!
மதுரை: லஞ்சம் வாங்கிய புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி பாக்கியை குறைப்பதற்காக லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
நாடெங்கும், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் புரையோடிப் போயுள்ளன. யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளே, லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளைச் செய்யும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகிறது.

பொதுமக்கள் தங்களின் தேவைக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது அவர்களிடம் லஞ்சம் பெறுவது தொடங்கி, பல மட்டங்களிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அப்படி, மதுரையில் லஞ்சம் வாங்கியபோது ஜிஎஸ்டி அதிகாரிகள் சிக்கி உள்ளனர்.
மதுரையில் கார்த்திக் என்பவரிடம் ஜிஎஸ்டி வரி பாக்கியை குறைப்பதற்காக மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் 2 பேர் ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமான சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினர். ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றதில் தொடர்பு இருந்ததை அடுத்து மத்திய ஜிஎஸ்டி பொறுப்பு துணை ஆணையர் சரவணகுமாரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் மூவரையும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
மேலும், லஞ்சப் புகார் தொடர்பாக ஜிஎஸ்டி பொறுப்பு துணை ஆணையர் சரவணகுமார் வீட்டில் சோதனை மேற்கொள்ள தஞ்சாவூர் சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திருவிடைமருதூரில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்து, அங்கு தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகச் சிக்கினார். அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரையில் ஜிஸ்டி அதிகாரிகள் லஞ்சம் பெற்றபோது சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications