"வெறும் 0.6% தான்".. முன்பு ஆக்சிஜனுக்கு கலங்கிய மதுரை.. இன்று கொரோனாவை துவம்சம் செய்தது.. பின்னணி!
மதுரை: கடந்த மே மாத தொடக்கத்தில் தினமும் ஆக்சிஜனுக்காக கடுமையாக போராடி வந்த மதுரை மாவட்டம் தற்போது கொரோனா பரவலை மிக சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4029 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2432017 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34926 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 54 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 33059 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மதுரையில் கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது.

எப்போது
கடந்த மே மாதத்தில் மதுரையில் கொரோனா கேஸ்கள் அதிக அளவில் பதிவாகிக்கொண்டு இருந்தது. அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக தட்டுப்பாடும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியது. தினமும் இரவு நேரத்தில்தான் ஆக்சிஜன் வரும்.

ஆக்சிஜன்
ஆக்சிஜன் தீரப்போவதற்கு இரண்டு - மூன்று மணி நேரம் முன்புதான் மதுரைக்கு ஆக்சிஜன் வரும். ஆக்சிஜன் வரும் நொடி வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் பதற்றமும், அழுத்தமும் நிலவும். பல நாட்கள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் இரவு முழுக்க கஷ்டப்பட்டு ஆக்சிஜன் கொண்டு வந்த சம்பவங்கள் கூட நடந்து இருக்கின்றன.

மதுரை தட்டுப்பாடு
அந்த அளவிற்கு ஆக்சிஜனுக்காக கஷ்டப்பட்ட மதுரை தற்போது கொரோனாவை கிட்டத்தட்ட வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். மொத்தமாக கொரோனாவை மதுரை மாவட்டம் அடித்து துவம்சம் செய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மதுரையில்தான் மிக குறைவான கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் நிலவி வருகிறது. மதுரையில் 0.6 என்ற அளவிற்குதான் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் நிலவுகிறது.

சதவிகிதம்
கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் என்றால் 100 பேரை சோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு கொரோனா வருகிறது என்ற கணக்கு ஆகும். மதுரையில் 13401 பேரை சோதனை செய்ததில் 75 பேருக்கு மட்டுமே இன்று கொரோனா வந்துள்ளது. அதாவது 0.6% பேருக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது. இதுதான் இருப்பதிலேயே மிக குறைந்த சதவிகிதம் ஆகும்.

சென்னை டிபிஆர்
மதுரைக்கு அடுத்து சென்னையில் டிபிஆர் 0.8% ஆக உள்ளது. அதற்கு அடுத்த காஞ்சிபுரத்தில் 1.2% ஆக இது உள்ளது. மதுரையில் ஆக்டிவ் கேஸ்கள் 693 ஆக உள்ளது. இன்று அங்கு 4 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகமாக கிரிஷ்னகிரியில் டிபிஆர் 4.6% ஆகவும் மயிலாடுதுறையில் 4.5% ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications