‛‛10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுங்க’’.. ஹைகோர்ட்டில் நிர்மலா தேவி மேல்முறையீடு.. இன்று விசாரணை
மதுரை: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலா தேவி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி ( வயது 56). இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பெயரை கூறி மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ வலைதளங்களில் வெளியானது.

இதுதொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலா தேவியை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2018 ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. அதோடு இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொழில் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு என்பது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. ஏப்ரல் 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஆஜராகினர்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். முருகன், கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால் இருவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் நிர்மலா தேவிக்கான தண்டனை விபரம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 30ம் தேதி நிர்மலா தேவிக்கான தண்டனையை நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார். நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் நிர்மலா தேவி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‛‛தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications