திருப்பரங்குன்றத்தில் வேட்பு மனு நிராகரிப்பு.. ஹைகோர்ட்டில் முறையிட்ட பாரதி கண்ணம்மா.. மனு தள்ளுபடி
திருநங்கை பாரதி கண்ணம்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, திருநங்கை பாரதி கண்ணம்மா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் மதுரை மகால் சாலையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் சுயேச்சையாக போட்டியிட ஆசைப்பட்டார்.
இதற்காக கடந்த 23ம் தேதி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துவிட்டார்.

வழக்கு
பாரதி கண்ணம்மா வேட்புமனு சரியாக முன்மொழியப்படவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பாரதிகண்ணம்மா மதுரை ஐகோர்டில் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தார்.

அவகாசம் வேண்டும்
தனது மனுவில், "எனது 2 பி படிவத்தில் பூர்த்தி செய்யாமல் விடப்பட்டுள்ள இடங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பாக தேர்தல் அலுவலர் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதனால் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டும், தேர்தல் அலுவலர் எனக்கு வாய்ப்பு தரவில்லை. வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

நிராகரிப்பு
அதனால் எனது வேட்புமனுவை நிராகரித்து தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டு கொண்டிருந்தார்.

தள்ளுபடி
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில் ஐகோர்ட் இதில் தலையிட முடியாது. தேர்தல் முடிந்ததும் மனுதாரர் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்" என்று நீதிபதிகள் சொல்லியதுடன், பாரதிகண்ணம்மாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications