மாஸ்க் பரோட்டா போடுவேன்.. கைலாசாவில் ஹோட்டலுக்கு இடம் கொடுங்க - நித்திக்கு ஹோட்டல் ஓனர் லெட்டர்
கைலாசா நாட்டை விலைக்கு வாங்கி பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ள நித்யானந்தாவிற்கு மதுரைக்கார ஹோட்டல் ஓனர் ஒருவர் இடம் கேட்டு லெட்டர் போட்டிருக்கிறார். மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை எல்லாம் சுட்டுக்கொடு
மதுரை: நிலாவில் இடம் கொடுத்தால் அங்கே போய் டீ கடை வைப்பார்கள் என்று கேரள மாநிலத்தவர்களை சொல்வார்கள். இங்கே மதுரைக்காரர் ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் வைக்க இடம் கேட்டு நித்யானந்தாவிற்கு லெட்டர் போட்டிருக்கிறார். அப்படி இடம் கொடுத்தால் மாஸ்க் பரோட்டா முதல் கொரோனா தோசை வரை சுட்டுக்கொடுத்து பக்தர்களை கவர்வேன் என்று கூறியுள்ளார் அந்த ஹோட்டல் ஓனர்.
Recommended Video
பித்தா பிறைசூடி என்று சிவபெருமானை சொல்வார்கள். பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டா நித்யானந்தா கைலாசா நாட்டில் அமர்ந்து கொண்டு தினசரியும் ஒரு வீடியோ போட்டு வருகிறார். இப்போது நானே சிவன் நானே கடவுள் என்று சொல்லியுள்ள அவர், சிவபெருமானின் ஆசிகள் என்று விநாயகர் சதுர்த்தி தினத்தில் பேசியிருக்கிறார்.
தற்போது கைலாச நாட்டின் புழக்கத்திற்கு பொற்காசுகளை அறிமுகம் செய்திருக்கிறார். விரைவில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். கால் காசு முதல் பத்து காசுவரை பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ள நித்யானந்தாவிற்கு லெட்டர் போட்டிருக்கிறார் மதுரையில் டெம்பிள் சிட்டி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் குமார்.
நித்யானந்தாவின் பொற்காசுகள்
கால் காசு, அரைக்காசு, ஒரு காசு என்று சொல்லி பத்து காசுகள் வரை பொற்காசுகளை கைலாசா டாலர்களை அறிமுகம் செய்திருக்கிறார் நித்யானந்தா. இந்த பரபரப்பு அடங்கும் முன்பே இன்னொரு பரபரப்பு கிளம்பியுள்ளது இது நித்யானந்தா கிளப்பியது அல்ல மதுரையில் இருந்து நித்யானந்தாவிற்கு லெட்டர் மூலம் கிளம்பியிருக்கிறது.
ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா
வாழ்ந்தா கைலாசாவில் போய் வாழவேண்டும் என்று சிங்கிள்ஸ்களை ஏங்க வைத்திருக்கிறார் நித்யானந்தா. அவரைப்பற்றி மீம்ஸ்கள்
பஞ்சமில்லாமல் சுற்றி வருகின்றன. ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடங்கியதோடு இப்போது பொற்காசுகளையும் புழக்கத்தில் விட்டிருக்கிறார். இந்து நாடுகளோடு பொருளாதார ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார் நித்யானந்தா.
ஹோட்டல் ஓனர் லெட்டர்
கைலாசாவில் போய் யார் கடை வைப்பார்கள் அந்த பொற்காசுகளைக் கொடுத்து யார் பொருட்களை வாங்கப்போகிறார்கள் இது நடைமுறையில் சாத்தியமா என்றெல்லாம் பேசினார்கள். இதோ மதுரையில் இருந்து லெட்டர் போட்டிருக்கிறார் ஒரு ஹோட்டல் ஓனர். மதுரையில் பிரபல ஹோட்டலான டெம்ப்பிள் சிட்டி ஓனர் குமார்தான் அந்த லெட்டரை எழுதியிருக்கிறார்.
கைலாசாவை வளப்படுத்த உதவும்
குமார் எழுதியுள்ள கடிதம்தான் இப்போது வைரலாகி வருகிறது. அந்த கடிதத்ததில் உலகிலேயே மிகச்சிறந்த உணவுகளை தயாரித்து கொடுப்போம் என்றும் இது கைலாசா நாட்டை வளப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்க் பரோட்டா போடுவேன்
நித்யானந்தா பக்தர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வதை போல கைலாசா மக்களை ஈர்க்கும் வகையில் மாஸ்க் புரோட்டா , கொரோனா தோசை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தயாராக இருக்கிறேன் என்று எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தில் கைலாசாவிற்கு அட்ரஸ் எழுதவில்லை.
கடிதம் போய் சேரும்
அதே நேரத்தில் பின்குறிப்பாக தனது கடிதத்தில் குமார் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். யுடுயூப் மூலமா பக்தர்களை சந்தித்து வருகிறார். அதன் மூலம் நாணயங்களை வெளியிட்டார் நித்யானந்தா. அதே போல அவர் காலையில் கண் விழித்து எழும் போது இந்த கடிதம் நித்யானந்தாவிடம் செய்தியாக போய் சேரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார் குமார். நித்யானந்தாதான் பரபரப்பை கிளப்புகிறார் என்றால் அவரை வைத்தும் சிலர் பிசினஸ் வளர்ச்சிக்கு பரபரப்பை கிளப்பி வருகிறார்கள்.