மெட்ரோ ரயில் எப்போது ஓடும்.. மீனாட்சி சித்திரை தேரோட்டத்திற்கு சிக்கலா?.. மதுரையன்ஸ் இதை படிங்க
மதுரை: மேலமாசி வீதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் கூறியுள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்றும் சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்த மக்களுக்கு மின்சார ரயிலுக்கு அடுத்த படியாக மெட்ரோ ரயில் கை கொடுத்துள்ளது. இதனால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லவும் பணி முடித்து வீடு திரும்பவும் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சென்னையை அடுத்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மதுரையில் எந்த, எந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது என்பது குறித்து கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலமாசி வீதியில் இன்று ஆய்வு நடைபெற்றது.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15 ஆம் தேதி தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என கூறினார்.
மெட்ரோ ரயில் திட்ட பணியால் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தில் 27 ரயில் நிலையங்கள் இடம்பெறும் என கூறினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சித்திக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications