திருப்பரங்குன்றம் வரை அவர்களின் அரசியல் தொடர்கிறது.. அமித்ஷா பேச்சுக்கு சு.வெங்கடேசன் பதிலடி!
மதுரை: "1000 ஆண்டுகால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்த மண்ணின் சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை தலைவணங்கி என் உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கும் போது பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லை என வருந்துகிறேன்.

3,000 ஆண்டுகால வரலாற்று பெருமை கொண்ட புனிதமான இடம் மதுரை.
ஜூன் 22 ஆம் தேதி முருகனுக்கான பக்தர்கள் மாநாடு இந்த மண்ணில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அனைவரும் சிறப்பாக நடத்தித் தர வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான 1000 ஆண்டுகால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று சொல்லும் துணிச்சலை பெற்றுள்ளது திமுக அரசு.
பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிபாட்டு தலத்தை அரசியல் லாபம், பிரிவினை வாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது." எனப் பேசி இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா. பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.
சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications