மதுரை தெற்கு தொகுதி.. அதிமுகவின் கோட்டையை குறி வைத்த பாஜக.. காய் நகர்த்தும் முக்கிய நிர்வாகி!
மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், மதுரை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரை தெற்கு தொகுதியை மையப்படுத்தி பாஜகவின் பல தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதற்கு செளராஷ்டிரா மக்களின் வாக்குகளும், அதிமுகவின் பலமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியலில் மதுரை மாவட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏற்கனவே மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், திமுக தரப்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதுரையின் 2 முக்கிய தொகுதிகளின் நிர்வாகிகளிடம் அதிகளவில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

முருகன் மாநாடு
அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக குன்றம் குமரனுக்கே என்று முருகன் மாநாடு நடத்த ஆயுத்தமாகி வருகிறது. இதனால் திமுக, பாஜக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மதுரையை குறி வைத்து திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
பாஜகவின் முக்கிய நிர்வாகியான ராம சீனிவாசன் மதுரை தெற்கு தொகுதியை குறி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலேயே மதுரையில் போட்டியிட்ட ராம சீனிவாசன், 2 லட்சத்து 19 ஆயிரத்து 35 வாக்குகளை பெற்றார். அதாவது அதிமுக சார்பாக போட்டியிட்ட சரவணனை விடவும் சுமர் 15 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பாஜக பெற்றது.
மதுரை தெற்கு தொகுதி
இதற்கு முக்கியமான காரணம் மதுரை தெற்கு தொகுதி தான். ஏனென்றால் மதுரை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குகளில் சு.வெங்கடேஷனுக்கு 45,783 வாக்குகள் கிடைத்தது. இதன்பின் ராம சீனிவாசனுக்கு 42,073 வாக்குகளும், அதிமுக சார்பாக போட்டியிட்ட சரவணனுக்கு 26,810 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலமாக மதுரை தெற்கு தொகுதியில் பாஜக செல்வாக்கு அதிகரித்திருந்ததாக பார்க்கப்பட்டது.
மதுரையை குறி வைக்கும் பாஜக
இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் மதுரைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில், மதுரையில் பாஜக கூடுதல் தொகுதியை எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல் இரு கட்சிகளும் இணைந்து நிற்கும் பட்சத்தில், மதுரையில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் அதிகளவில் வெல்ல வாய்ப்புகள் உள்ளது.
அதிமுகவின் கோட்டை
அதேபோல் மதுரை தெற்கு தொகுதி மீண்டும் மதிமுகவின் பூமிநாதனுக்கு ஒதுக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மதுரை தெற்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் மட்டுமே அதிமுக வேட்பாளர் தோல்வியை சந்தித்தார்.
அதிமுக விட்டுக் கொடுக்குமா?
அதனால் பாஜகவுக்கு தனது கோட்டையை அதிமுக விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி உள்ளது. அதேபோல் பாஜகவுக்கு மதுரை தெற்கு தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் அதிமுகவில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்களும் பூமிநாதனுக்கு வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் பாஜகவுக்கு வெல்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
செளராஷ்டிரா மக்களின் வாக்குகள்
இதனால் பாஜகவின் ராம சீனிவாசன் மதுரை தெற்கு தொகுதியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார். ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பொதுக் கூட்டத்தில் ராம சீனிவாசனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா மக்களின் வாக்குகள் அதிகமிருப்பதால், பாஜக மதுரை தெற்கை தன்வசப்படுத்த உச்சபட்ச முயற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications