100 ஆடு + 150 கோழி.. பூரித்த மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி: திருமங்கலத்தில் திரண்ட முனியாண்டி விலாஸ்
மதுரை: மதுரை முனியாண்டி கோயில் திருவிழா மீண்டும் தமிழக மக்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது.. மலர் தட்டு ஊர்வலம் முதல் காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறப்பட்டது வரை, மக்களை ஈர்த்து வருகிறது திருமங்கலம் முனியாண்டி கோயில் பொங்கல் விழா.
மதுரை திருமங்கலம் அருகேயுள்ளது எஸ்.கோபாலபுரம்... இந்த கோபாலபுரத்தில் பிரசித்தி பெற்றது வடக்கம்பட்டி முனியாண்டி கோயில்.. இந்த ஊரை சேர்ந்தவர்கள்தான், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் புகழ்பெற்ற "முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்தக் கோயிலின் பெயரில்தான், முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் நடத்தப்பட்டும் வருகின்றன.

முனியாண்டி விலாஸ்: ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்றும், கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் அசைவ உணவுப் பரிமாறும் அசைவ உணவுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த அன்னதான விழாவில், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கலந்து கொள்வார்கள்.. இவர்களுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி, மலேசியா, துபாய் என பல்வேறு வெளிநாடுகளிலிருந்து, மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம்.
திருவிழா: அதுமட்டுமல்ல, ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்களாம்.. மேலும், தங்களது தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.
அந்தவகையில், இந்த வருடம் கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று நடந்த பொங்கல் விழாவில் 250 பெண்கள் பால் குடம் எடுத்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தார்கள்..
உரிமையாளர்கள்: இதற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வடக்கம்பட்டியில் குவிந்துவிட்டனர். பிறகு, 100 ஆட்டுக் கிடாய்கள், 150 கோழிகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன... இதையடுத்து, கமகம பிரியாணி தயாரானது.. மொத்தம் 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது..
கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்... விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோரும் பிரியாணி பிரசாதம் வாங்கி சென்றனர். பின்னர் மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலம்: அப்போது, தாம்பூல தட்டில், தேங்காய், பூ, பழங்களை வைத்துக் கொண்டு, நாட்டாமை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர்.. இந்த மலர் தட்டு ஊர்வலத்தின்போது, ஏராளமானோர் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். அப்போது பெண்கள் பலர் சாமியாடினார்கள்..
பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பொங்கல் வைத்து, அசைவ அன்னதானம் செய்த விழா, இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications