டைடல் பார்க் கட்டி முடித்தபின்.. மதுரை வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும்.. டிஆர்பி ராஜா அப்டேட்!
மதுரை: மதுரையில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின், அதன் வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே மேலூர் அருகே சிப்காட் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, டைடல் பார்க் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதனால் மதுரையின் வளர்ச்சியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் பல்வேறு மிகப்பெரிய முதலீடுகளில் குவிந்துள்ள நிலையில், அடுத்ததாக தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு தரப்பிலும் சில தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு தரப்பில் விருதுநகரில் மினி டைடல் பார்க் டெண்டர் பணிகள் கோரப்பட்டுள்ளது. ஆனால் தென் மாவட்டங்களின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் மதுரையில் பெரியளவில் எந்த தொழில் வளர்ச்சியும் அடையவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2022ல் அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் பணிகள் கூட இப்போதுதான் கட்டுமான கட்டத்தையே எட்டி இருக்கிறது.
இதனால் திமுக ஆட்சியில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என்று இளைஞர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், மதுரைக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. விருதுநகர், மணப்பாறை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மதுரையை பொறுத்தவரை மாநகராட்சிக்குள் எங்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. இப்போதுதான் தேடி கண்டுபிடித்து 300 ஏக்கர் தயார் செய்திருக்கிறோம். ஏற்கனவே மேலூர் அருகே ஒரு சிப்காட் அறிவித்துள்ளோம். அதேபோல் 5 லட்சம் ஸ்கொயர் ஃபீட்டில் டைடல் பார்க் அறிவித்துள்ளோம். ஏற்கனவே எல்காட் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
டைடல் பார்க் கட்டுமான பணிகள் நிறைவடைந்தால் கிரேடு ஏ நிறுவனங்கள் வந்து குவியத் தொடங்கும். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி நிச்சயம் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். ஒரே நாள் இரவில் எதுவும் நடந்துவிடாது. இவ்வளவு இளைஞர்கள், இவ்வளவு திறமையாளர்கள் இருக்கிறார்கள் என்று உலக நாடுகளிடம் பேசி வருகிறோம். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை மார்க்கெட் செய்து வருகிறோம்.
மதுரையில் வெறும் கோயில், திருவிழா மட்டும் இல்லை.. படித்த இளைஞர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்.. டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடக்கும் போதே ஏராளமான அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. டைடல் பார்க் முடிந்த பின் மின்னல் வேகத்தில் வளர்ச்சியை எட்டும். மதுரையில் இன்னும் நிலம் இருந்தால், அரசு கையகப்படுத்த தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications